
லங்காவி – மே-2 – லீமா’25 எனப்படும் லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான் கண்காட்சியால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டதாகக் கூறி, நேற்று வரை போலீஸுக்கு 27 புகார்கள் கிடைத்துள்ளன.
வான்வழி காட்சிகளிலிருந்து உருவான அதிர்ச்சி அலைகளால் அச்சேதங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
அனைத்துப் புகார்களும் முழுமையாக விசாரிக்கப்பட்டு, பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என, கெடா போலீஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலே உறுதியளித்தார்.
மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையமான CAAM ஆய்வை நடத்தி, சரிபார்ப்பு முடிந்ததும், விசாரணை முடிவுகள் கண்காட்சி ஏற்பாட்டாளர்களான தற்காப்பு அமைச்சுக்கும், Global Exhibitions and Conferences Sdn Bhd நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
எடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளை அத்தரப்புகள் தீர்மானிக்குமென ஃபிசோல் சொன்னார். அதே நேரத்தில், வந்த புகார்கள் அனைத்தும் உண்மையானவை என தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட ஃபிசோல், சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொது மக்களை வலியுறுத்தினார்.
லீமா ’25 கண்காட்சியுடன் தொடர்புடைய சொத்து சேத புகார்களை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் எழுப்பியக் கவலைகள் புறக்கணிக்கப்படாது என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் முன்னதாகக் கூறியிருந்தார்.