![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-29-Nov-2023-10-14-AM-9174.jpg)
கோலாலம்பூர், நவ 29 – நாட்டில் கோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மலேசியர்கள் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முழு முயற்சியை எடுக்காவிட்டால் சுவாச பிரச்சனைகளால் இதர பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என மக்களுக்கு அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்டு இறுதி நெருங்குவதால் மக்களில் பலர் விடுமுறையில் வெளியூர் மற்றும் விழாக்கால நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதானவர்கள், சிறார்கள் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் தொற்று மோசமான பாதிப்பை உருவாக்கும் என்பதால் முடிந்தவரை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்படி பொது சுகாதார மருத்துவ நிபுணரான டத்தோ டாக்டர் ஜைனல் அரிஃபின் ஓமர் கேட்டுக்கொண்டார். கோவிட் தொற்று மட்டுமின்றி சுவாசம் சம்பந்தப்பட்ட மற்றும் நீரினால் பரவும் நோய்கள் குறித்தும் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நெரிசல்மிக்க இடங்களுக்கு செல்வோர் முகக்கவசத்தை அணிந்துகொள்வதோடு அடிக்கடி கைககளை கழுவும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.