![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-12-Mar-2024-05-34-PM-5779.jpg)
புத்ராஜெயா, மார்ச்-12 – United Tausug Citizens (UTC) என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தரப்பு, சபாவுக்கு உரிமைக் கோரியிருப்பது, ஒட்டுமொத்த தேசத்துக்கான அச்சுறுத்தலாகும்.
எனவே, அடிப்படையற்ற அந்த உரிமைக் கோரலை மலேசியா தக்க வகையில் கையாள வேண்டும் என சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்தார்.
UTC கேட்கும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 70.2 பில்லியன் மலேசிய ரிங்கிட் பணம், நாட்டின் பட்ஜெட்டில் 16 விழுக்காட்டுக்குச் சமம் என அசாலினா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
‘Cession Money’ அல்லது பிரதேசங்களை ஒப்படைப்பதற்கான பணம் என்ற பெயரில், மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடுக்கும் UTC-யின் செயல் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகும்.
அதோடு, UTC-யை இறையாண்மைமிக்க சுதந்திர ஆட்சியாளராக மலேசியா அங்கீகரிக்க வேண்டும் என நிபந்தனைப் போடுவதல்லாம் அதிகபட்சத்தின் உச்சக்கட்டம் என அமைச்சர் சாடினார்.
சொந்த இலாபத்திற்காக நடுவர் மன்றத்தை ‘அக்கும்பல்’ தவறாகப் பயன்படுத்துகிறது; இது மிரட்டிப் பணம் பறிக்கும் செயலுக்கு ஒப்பாகும் என அசாலினா சொன்னார்.
‘சுலு சுல்தான் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்கங்களின் சட்டப்பூர்வக் காப்பாளர்’ என தனக்கு தானே பிரகடனப்படுத்திக் கொண்ட UTC, அண்மையில் தனது அந்த ‘உரிமைப் போராட்டத்தை’ தீவிரப்படுத்தியது.
சபாவை சொந்தம் கொண்டாடும் UTC, மலேசிய அரசாங்கம் உடனடியாக 15 பில்லியன் டாலரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், சற்றும் அடிப்படையில்லாத கோரிக்கை அதுவென பதிலடி கொடுத்த மலேசிய அரசு, தலைக் கீழாக நின்றாலும் பணம் கிடையாது என ஒரே போடாக போட்டது.