![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/9e63553490319ca16a0eb4b235fa8847660b8f58596c6.jpg)
லஹாட் டத்து, ஏப்ரல் 2 – தொழிற்கல்வி கல்லூரியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும், 13 பதின்ம வயது இளைஞர்களுக்கு எதிராக, சபா, லஹாட் டத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், கொலை குற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், அவர்களிடமிருந்து இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
16 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, 17 வயது முஹமட் நஸ்மி அய்சாத் முஹமட் நருல் அஸ்வானை கொலை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
மார்ச் 21-ஆம் தேதி இரவு மணி ஒன்பதுக்கும், மறுநாள் மார்ச் 22-ஆம் தேதி காலை மணி 7.38-க்கும் இடைப்பட்ட நேரத்தில், லஹாட் டத்து தொழிற்கல்லூரி தங்கும் விடுதியில், அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கபட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அவர்கள் அனைவரும் வயது குறைந்தவர்கள் என்பதால், இன்று இவ்வழக்கு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது.
இரசாயத் துறை மற்றும் சவப்பரிசோதனை அறிக்கைகாக காத்திருப்பதால், இவ்வழக்கு விசாரணை மே மாதம் 16-ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும்.