![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-13-Feb-2024-12-12-PM-7677.jpg)
கோலாலம்பூர், பிப் 13 – சமூக வலைத்தளத்தில் தமக்கு எதிராக அவதூறு அம்சம் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் போலீசில் புகார் செய்யவிருப்பதாக பெர்மாத்தாங் பாவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அன்வர் தெரிவித்திருக்கிறார். சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின், அடுத்த வாரம் தமது வழக்கறிஞர்கள் போலீசில் புகார் செய்வார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியுமான நூருல் இஸ்ஸா தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். பொய்யான தகவலை பரப்புவதும், அவதூறு தெரிவிப்பதும் 1998ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233ஆவது விதியை மீறுவதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பொருளாதார ஆலோசனை மன்றத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நூருல் இஸ்ஸா 35,000 ரிங்கிட் சம்பளம் பெறுவதாக இதற்கு முன் முகநூல் பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதோடு 5,000 மற்றும் 20,000 ரிங்கிட் சம்பளத்திற்கு இரண்டு பணியாளர்களையும் நூருல் இஸ்ஸா நியமித்திருப்பதாகவும் அந்த பதிவின் உள்ளடக்கத்தில் இடம்பெற்றிருந்தது.