
பினாங்கு, பிப்ரவரி 3 – கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியன்று, Lebuh Union பகுதியில் லேசான வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் தீப்பற்றிய விபத்தில், 29 வயதுடைய பினாங்கு நகராட்சி மன்றமான MBPP அமலாக்க அதிகாரி Muhammad Amirul Ashraf bin Rosidi காயமடைந்துள்ளார்.
அனுமதி இன்றி விற்கப்பட்ட பலூன்களைப் பறிமுதல் செய்து அழிக்கும் பணியின் போது, பலூன்கள் திடீரென வெடித்து தீப்பற்றியதாக MBPP தெரிவித்துள்ளது. இதில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஒருவர் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு மற்றொருவர் லேசான காயங்களுடன் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றார்.
காயமடைந்த அதிகாரியை YB ராம் கார்பால், YB RSN ராயர், YB செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் MBPP மேயர் டத்தோ ராஜேந்திரன் நேரில் சந்தித்து நல விசாரணை மேற்கொண்டனர். இந்து அறக்கட்டளை சார்பில் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன. மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என MBPP தெரிவித்துள்ளது.



