![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-24-at-6.25.32-PM-780x470.jpeg)
ஜோகூர் பாரு, ஏப்ரல் 24 – சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கு வசதியாக, ஜோகூர் சோதனைச்சாவடிகளில் கியூ.ஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை வருகின்ற ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தப் புதிய குடிநுழைவு முறையை மலேசியாவின் குடிநுழைவுத்துறை நிர்வகிக்கும் என ஜோகூர் மாநிலப் பொதுப் பணிகள் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே நேற்று தெரிவித்தார்.
இந்தப் புதிய திட்டத்திற்கு முன்னோட்டமாக, தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள் ஏறி, ஸ்கேன் செய்வர் என்றும் கூறினார்.
நாள்தோறும் சுமார் 400 முதல் 500 தொழிற்சாலைப் பேருந்துகள் நிலச் சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்வது கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புதிய திட்டத்தின் வழி கடப்பிதழைக் காட்டுவதற்குப் பதிலாக சிங்கப்பூருக்குப் பயணம் செய்பவர் கியூ,ஆர் குறியீட்டை பயன்படுத்துதல் இலகுவாகும்.
இதனிடையே, உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையை சிங்கப்பூர் கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.