
சிரம்பான், ஆகஸ்ட்-16-நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான ‘Fun Run 2026’ ஓட்டம் நேற்று சிரம்பானில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
நெகிரி செம்பிலான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, இம்மூன்று தரப்பினரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைத்து நடத்தப்பட்ட முதல் ஓட்டப் பந்தயமாகும்.
400 மாணவர்கள், 100 முன்னாள் மாணவர்கள் மற்றும் 50 ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 550 பேர் பங்கேற்றனர்.
சிரம்பான் மாநகர மன்ற வளாகத்தில் காலை 7.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக கொடியசைத்து ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்களும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு, மாணவர்களுக்கு நெகிரி செம்பிலான் கல்வித் துறையின் PAJSK மதிப்பெண்களும் வழங்கப்பட்டன.
தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், உடற்தகுதியை மேம்படுத்தவும், விளையாட்டு மூலம் ஒழுக்கத்தை வளர்க்கவும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய சமுதாயத்தினரிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



