
சிரம்பான், செப்டம்பர்-7,சிரம்பான், கார்டன் ஹோம்ஸ் பகுதியில் நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய நெகிரி செம்பிலான் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ Alzafny Ahmad, உயிரிழந்த நபர் மீது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான 8 முந்தைய வழக்குகள் உள்ளதாகவும், 1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் கீழ் அவர் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகக் கூறிய உள்ளூர்வாசிகள், உடனடியாகப் பல ரோந்து வாகனங்களில் வந்த போலீஸார் அப்பகுதியை முற்றுகையிட்டுச் சீல் வைத்ததாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த விரிவான விவரங்களை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



