
பெய்ஜிங், ஜூன்-4-சமூக வலைத்தளங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் (Followers) கொண்டு மிகவும் பிரபலமாக விளங்கிய நாய் ஒன்று, திருடப்பட்டு உணவகம் ஒன்றில் இறைச்சியாக்கப்பட்ட கொடூர சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Henan மாநிலத்தைச் சேர்ந்த பயணப் பதிவர் Guo என்பவருக்குச் சொந்தமான 8 வயது Border Collie இரகத்தைச் சேர்ந்த Chutou என்ற நாய், அதன் புத்தி கூர்மைக்காக இணையத்தில் மிகவும் பிரபலமானது.
உரிமையாளர் குவோ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், அவரது வீட்டின் விவசாய நிலத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இந்த நாயை இருவர் மின்சார மோட்டார் சைக்கிளில் வந்து திருடிச் சென்றுள்ளனர்.
CCTV கேமரா மூலம் திருடனை அடையாளம் கண்ட குவோ, தனது நாயை மீட்டுக் கொடுக்க 10,000 யுவான் தருவதாகக் கூறியும் பலனளிக்கவில்லை.
அந்த நாய் வெறும் 180 யுவானுக்கு (சுமார் 25 அமெரிக்க டாலர்) நாய் இறைச்சி விற்கும் உணவகம் ஒன்றிற்கு விற்கப்பட்டு, ஏற்கனவே சமைக்கப்பட்டு விட்டதாகக் கூறி திருடன் திமிராகப் பதிலளித்துள்ளான்.
சீனாவில் வளர்ப்புப் பிராணிகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் பலவீனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி குவோ தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார்.



