
குவைத் சிட்டி, ஜூன்-4-மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்திற்கு இடையே, குவைத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்திய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் அனைத்துலக விமான நிலையத்தின் முக்கியப் பயணிகள் முனையத்தை இலக்காகக் கொண்டு, ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தான் அந்த இந்திய ஆடவர் உயிரிழந்துள்ளார்.
இதனை குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், அவரின் அடையாளங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், காயமடைந்த மற்ற இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் குவைத் அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளது.
மத்தியக் கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் தீவிர பதற்றத்தின் உச்சகட்டமாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில், குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை இலக்காகக் கொண்டு வந்த மேலும் பல ட்ரோன்களையும், பஹ்ரேய்னை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளையும் அமெரிக்க ராணுவம் தடுத்து அழித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, Hormuz நீரிணையில் உள்ள ஈரானின் இராணுவக் கட்டுப்பாட்டு மையத்தின் மீது அமெரிக்கப் படைகள் உடனடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த பரஸ்பர தாக்குதல்களால், அந்த வட்டாரத்தில் நிலவி வந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.



