
கோலாலம்பூர், செப்- 11–சீன மற்றும் இந்திய வாக்காளர்களை மீண்டும் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் பக்கம் கொண்டு வந்ததற்காக மசீச மற்றும் மஇகாவிற்கு அம்னோ நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.
ஜோகூரில் BN-க்கான சீனர்களின் ஆதரவு 2022ஆம் ஆண்டில் 9.5 விழுக்காட்டிலிருந்து இவ்வாண்டு 20 விழுக்காடாக உயர்ந்துள்ளது. நெகிரி செம்பிலானில் ஆதரவு 8.7 விழுக்காட்டிலிருந்து 14 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக அம்னோ பொதுச்செயலாளர் Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.
இந்திய வாக்காளர்களின் ஆதரவும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஜோகூரில் 18.9 விழுக்காட்டிலிருந்து 54.8 விழுக்காடாகவும், நெகிரி செம்பிலானில் 17.6 விழுக்காட்டிலிருந்து 49.6 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த முன்னேற்றத்துக்காக மசீச தலைவர் வீ கா சியோங், மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், மக்கள் முற்போக்குக் கட்சி (PPP) மற்றும் Friends of BN அமைப்புக்கும் Asyraf நன்றி தெரிவித்தார். மலாய் வாக்காளர்களின் ஆதரவும் ஜோகூரில் 82.4 விழுக்காடாகவும், நெகிரி செம்பிலானில் 79 விழுக்காடாகவும் ஏற்றம் கண்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நெகிரி செம்பிலான் தேர்தலில் BN 18 இடங்களையும் பெரிக்காத்தான் நேஷனல் 7 இடங்களையும் வென்றன. ஜோகூரில் போட்டியிட்ட 56 இடங்களில் 48 இடங்களை வென்று BN ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.



