![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-17-Nov-2023-09-56-AM-6525.jpg)
கோலாலம்பூர், நவ 17 – சீன மற்றும் தமிழ்மொழி பாடங்களை போதிப்பதற்கு கூடுதலான ஆசிரியர்கள் இருப்பதாக கூறிய கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் பல்வேறு தரப்பினரின் கண்டத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரது அறிக்கை குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம், இந்த அறிக்கை அபத்தமானது என்று சீனக் கல்விக் குழுக்களான டோங் ஸோங் மற்றும் ஜியாவ் ஸோங் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன. அவரது அறிக்கை குறைந்த தொழில் நிபுணத்துவத்தை காட்டுவதோடு பொறுப்பற்றதாக இருப்பதால் சீன தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2024 முதல் 2029 வரை சீன மற்றும் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இந்த காலக்கட்டத்தில் அவ்விரு பள்ளிகளும் கூடுதல் ஆசியர்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யு ஹுய்க்கு தெரிவித்த எழுத்துப் பூர்வமான பதிலில் ஃபத்லினா கூறியிருந்தார்.
சீன ஆரம்பப் பள்ளிகளில் தற்போது 1,300 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் , 2024-2029 வரை 3,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சீன ஆரம்பப் பள்ளிகளில் இருந்து ஓய்வு பெறும் 500 முதல் 600 ஆசிரியர்களை ஈடுகட்ட வேண்டியிருப்பதை கல்வி அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன என்றும் டோங் ஜியாவ் ஸோங் தெரிவித்துள்ளது. சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி வரை சீனப் பாடத்திற்கு 6,319 ஆசிரியர்கள் தேவை, ஆனால் மொத்தம் 6,859 பணியிடங்கள் நிரப்பப்பட்டு 540 ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர் என Fadhlina பதில் அளித்திருந்தார். தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கத் தேவையான 1,433 ஆசிரியர்களுக்கு மேல் 308 ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.