
கோலாலம்பூர், ஏப் 21 – பினாங்கிலுள்ள சீன மயானத்தில் கடந்த மாதம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரு ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தம்பதியினரை ஜோர்ஜ் டவுன் உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது. 58 வயதான எம். ஜெகதீசன் மற்றும் 37 வயதான ஹலிலா அபு பக்கர் ஆகியோரின் குற்றத்தீர்ப்பை நீதிபதி ரோபியா முகமட் ( Rofiah Mohamad ) உறுதிசெய்தார்.
ஆனால் அவர்களின் 12 மாத சிறைத் தண்டனையை மார்ச் 23 ஆம்தேதி அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை கணக்கிடுமாறு உத்தரவிட்டார்.
இதன்மூலம், அந்த தண்டனையானது காவலில் இருக்கும் 28 நாட்களாகக் குறைக்கப்பட்டது.
மார்ச் மாதம் 22 ஆம்தேதியன்று Batu Gantong சீன மயானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றத்தை, அந்தத் தம்பதியினர் ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு 12 மாதம் சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தண்டனை மிக அதிகமாக இருப்பதால் அதை மறுபரிசீலனை செய்யும்படி அவர்களது வழக்கறிஞர் நரேன் சிங் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
அவரது முறையீட்டை அரசு தரப்பு ஏற்றுக்கொள்வதாக அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் டி.பி.பி மூனா ஜபாரும் நீதிமன்றத்தில் தெரிவித்ததால் ஜெகதீசன் மற்றும் ஹலிலா ஆகியோருக்கான தீர்ப்பை நீதிபதி ரோபியா 28 நாட்களாக குறைத்தார்.



