
கோலாலம்பூர், ஜூன்-22 – சுகாதார பாதுகாப்புக்கான காப்பீட்டு பிரீமியம் தொகையைச் செலுத்த, ஊழியர் சேமநிதி வாரியமான EPF-ப்பின் இரண்டாவது கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கும் பரிந்துரை ஆபத்தானது.
செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் அவ்வாறு கவலைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் சுமையைக் குறைக்க விரும்பும் அரசாங்கத்தின் நல்லெண்ணம் வரவேற்கக் கூடியதே.
என்றாலும், இதுவொரு தவறான முன்னுதாரணமாகி விடுமென அவர் எச்சரித்தார்.
ஓய்வு கால நிதி பாதுகாப்புக் கருதியே EPF அமைக்கப்பட்டதை நாம் மறந்து விடக் கூடாது என்றார் அவர்.
மலேசியா, வயதானவர்கள் நாடாக உருமாறி வருகிறது; 2030 வாக்கில் நாட்டு மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 55 வயதுக்கு மேற்பட்ட EPF சந்தாத்தாரர்களில் 27 விழுக்காட்டினர் மட்டுமே, வசதியான மற்றும் நிம்மதியான ஓய்வு காலத்திற்குத் தேவையான குறைந்தபட்ச சேமிப்புத் தொகையான 240,000 ரிங்கிட்டை கொண்டுள்ளனர்.
நிலைமை இவ்வாறிருக்க, EPF சேமிப்பிலிருந்து இப்படியே தொடர்ந்து பணத்தை மீற்க அனுமதித்தால் என்னாவது என லிங்கேஷ் கேள்வி எழுப்பினார்.
தவிர, EPF பணத்தை மக்கள் மீட்க முடியும் என தெரிந்து விட்டால், காப்புறுதி நிறுவனங்களும் இஷ்டத்திற்கு பிரீமியம் தொகையை அதிகரிக்கக் கூடுமென அவர் எச்சரித்தார்.
குறுகிய காலத் தீர்வை மட்டுமே யோசிப்பது சரியாகாது; நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார பராமரிப்பின் எதிர்காலம் குறித்து நீண்ட கால அடிப்படையில் அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
மாதாந்திர காப்பீட்டு பிரீமியம் தொகையைச் செலுத்த உதவும் வகையில், கட்டாயமாக அல்லாமல் தேர்வு அடிப்படையில், சந்தாத்தாரர்களின் EPF இரண்டாவது கணக்கிலிருந்து பணத்தை மீட்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் முன்னதாகக் கூறியிருந்தார்