செத்தியா ஆலாமில் பயங்கரம்: இரவு நேரத்தில் தனியாக நடந்துச் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கம் செய்த மர்ம நபர்

ஷா ஆலாம், ஜூன்-10-சிலாங்கூர், ஷா ஆலாம் செத்தியா ஆலாமில் இரவு நேரத்தில் வீட்டுக்கு நடந்துச் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், மர்ம நபர் ஒருவரால் வலுக்கட்டாயமாகத் தாக்கப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்றிரவு 7 மணி வாக்கில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 20 வயது பெண் தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அவரைப் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத ஒரு நபர், திடீரென அவரை அணைத்து, முத்தமிட்டு மிக மோசமான முறையில் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அப்பெண் போலீஸில் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, ஷா ஆலாம் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளின் அடிப்படையில், தப்பியோடிய அந்த மர்ம நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



