
பிரங்பார்ட் , ஜூன் 30 -ஜெர்மனியில் உள்ள ஒரு இளைஞர் நல மையத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் மேலும் பலர் காயம் அடைந்தனர். அதே வேளையில் சந்தேகத்திற்குரிய துப்பாக்கிக்காரன் கைது செய்யப்பட்டதாக போலீஸ் துறையினர் தெரிவித்தனர்.
அந்நாட்டில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஹம்பர்க்கிற்கு மேற்கே உள்ள ஸ்டேட் (Stade) நகரில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு கவசங்கள் அணிந்த போலீஸ்காரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் பெருமளவில் காணப்பட்டன.
குற்றச் செயலில் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றொரு நபர் உட்பட இதுவரை இருவர் கைது செய்யப்பட்டதை போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
எனினும் துல்லியமாக என்ன நடந்தது என்பது குறித்த விசாரணை தொடர்ந்து
நடைபெற்று வருகிறது. ஐரோப்பாவிலேயே மிகவும் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாகும்.
அந்நாட்டில் 25 வயதுக்குட்பட்ட எவரும் துப்பாக்கி உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு மனநல மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அங்கு கட்டாயமாகும்.



