கிள்ளான், மார்ச் 9 – கிள்ளானில் ஹோட்டல் ஒன்றில் மேற்கொண்ட சோதனையில், 4,582 கிராம் எடையிலான 100 பேக்கட் போதைப் பொருளைப் போலீஸ் கைப்பற்றியிருக்கிறது.
கிள்ளான் சுற்று வட்டாரத்தில் விநியோகிப்பதற்காக, ஜொகூர், உலு திராமில் இருந்து அந்த 100 பேக்கட்டுகளும் கடத்திக் கொண்டு வரப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
Ecstasy வகைப் போதைப் பொடிகளைக் கொண்ட அந்த பேக்கட்டுகளின் மொத்த மதிப்பு 229,100 ரிங்கிட் என தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ச்சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.
கடந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் 28 வயது உள்ளூர் ஆடவன் கைதான போது, அப்போதைப் பொருட்கள் சிக்கின.
எனினும், அவனிடம் மேற்கொள்ளப்பட்ட தொடக்கக்கட்ட சிறுநீர் பரிசோதனையில் அவன் போதைப் பொருள் உட்கொண்டிருக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
விசாரணைகளுக்காக 8 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட அவ்வாடவன், மார்ச் ஐந்தாம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக ச்சா ஹூங் சொன்னார்.
1952 அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் அவன் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.
தென் கிள்ளானில் போதைப் பொருள் சம்பவங்கள் வேரறுக்கப்படும் என எச்சரித்த ச்சா ஹூங், போதைப் பொருள் விநியோகம் செய்பவர்களும், உபயோகிப்பவர்களும் நிச்சயம் பிடிபடுவர் என்றார்.