![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-17-Mar-2024-11-18-AM-4780.jpg)
பாசீர் கூடாங், மார்ச் 17 -ஜொகூர் பாசீர் கூடாங்கில் ஒன்றரை வயதே நிரம்பிய ஆண் குழந்தையின் கழுத்தை சொந்த தாயே கத்தியால் அறுத்துக் கொலைச் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சைப் பதற வைக்கும் அச்சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் அங்குள்ள வீடமைப்புப் பகுதியொன்றில் நிகழ்ந்ததாக, ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் தெரிவித்தார்.
தான் படுகொலை செய்த குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதை புகைப்படம் எடுத்து, அதனை தனது கணவரின் WhatsApp-ப்புக்கு 32 வயது அந்த ‘கொடூர’ தாய் அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸ் அப்பெண்ணைக் கைதுச் செய்து, கழுத்தறுக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியையும் கைப்பற்றியது.
கைதானத் தாயை, விசாரணைக்காகத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படும் என கமிஷ்னர் குமார் மேலும் சொன்னார்.
குழந்தையின் உடல் சவப்பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளை, சம்பவத்திற்கான காரணம் குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், யூகங்களைக் கிளப்பும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொது மக்களைக் குமார் கேட்டுக் கொண்டார்.