ஜோகூர், BSI, KSAB குடிநுழைவு முகப்புகளில், கடப்பிதழுக்கு பதிலாக QR குறியீடு பயன்பாடு ; ஜூன் முதலாம் தேதி நடப்புக்கு வருகிறது
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-27-May-2024-04-47-PM-8095.jpg)
ஜோகூர் பாரு, மே 27 – ஜூன் முதலாம் தேதி தொடங்கி, ஜோகூரிலுள்ள, குடிநுழைவு முகப்புகளில் மலேசியர்கள் கடப்பிதழுக்கு பதிலாக QR குறியீடுகளை பயன்படுத்தலாம்.
குறிப்பாக, சுல்தான் இஸ்கண்டார் கட்டடம் மற்றும் சுல்தான் அபு பாக்கார் கட்டடம் ஆகியவற்றில் இருக்கும் CIQ சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தும் முகப்புகளில் அந்த QR குறியீடு பயன்பாடு அமலுக்கு வருகிறது.
எனினும், தொடக்க கட்டமாக, சுல்தான் இஸ்கண்டார் கட்டடம் வாயிலாக பயணிக்கும் பேருந்து பயணிகளுக்கும், சுல்தான் அபு பாக்கார் கட்டடம் வாயிலாக பயணத்தை மோற்கொள்ளும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் அந்த சலுகை வழங்கப்படுமென, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ படிலா யூசோப் தெரிவித்தார்.
மூன்று மாதம் சோதனைக்கு பின்னர், பிரச்சனை எதுவும் அடையாளம் காணப்படாமல் இருந்தால், அடுத்த கட்டமாக அந்த சலுகை இதர வாகனமோட்டிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.
இறுதியாக தான் அது அந்நிய வாகனமோட்டிகளுக்கு திறக்கப்படுமென, துணைப் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
ஜோகூர் நுழைவாயில்களில் ஏற்படும் நெரிசல் மீதான சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.