![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-08-at-8.54.00-AM-526x470.jpeg)
கோலாலம்பூர், டிச 8 – தமது சிறப்பு அதிகாரியாக விளங்கிய டத்தோ சூரியகுமார் காலமானதை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகியிருப்பதாக ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் தப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவு பெரும் இழப்பாகும். 2008ஆம் ஆண்டு தாம் கூட்டரசு பிரதேச துணையமைச்சராகவும், 2013ஆம் ஆண்டிலிருந்து இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சராகவும், பின்னர் 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை மனிதவள அமைச்சராகவும் பணியாற்றிய காலத்தில் சூரியகுமார் தமது அதிகாரியாக இருந்து வந்ததாகவும் அவரது மறைவு தமக்கு பெரிய இழப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியிருப்பதாக சரவணன் தெரிவித்தார்.
அவரது மரணச் செய்தி தமது இதயத்தை நொறுங்கச் செய்துவிட்டதாகவும் சூரியகுமார் நல்ல மனிதர் மட்டும் அல்ல, சிறந்த சேவையாளராகவும் விளங்கி வந்ததாக டத்தோ சரவணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தமது தப்பா தொகுதியில் சிறந்த சேவையை வழங்குவதிலும் சூரியகுமார் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது சேவையும் கருணை உள்ளத்தோடு அனைவருக்கும் உதவி வழங்கி வந்ததையும் என்றும் மறக்க முடியாது.
டத்தோ சூரியகுமாரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் சரவணன் தெரிவித்துக்கொண்டார்.