
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்-17,நிறுவன அமைப்பின் கீழ் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் டியூஷன் மையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 30 விழுக்காட்டு பூமிபுத்ரா பங்குகளின் தேவைக் குறித்து கல்வி அமைச்சு உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் (Lee Chean Chung) வலியுறுத்தியுள்ளார்.
2027-ஆம் ஆண்டு முதல் இந்த 30 விழுக்காட்டுப் பங்குகளைப் பூர்த்திச் செய்யாத கல்வி நிறுவனங்கள், தங்களின் பதிவைப் புதுப்பிக்க முடியாமல் போகலாம் என்ற தகவல்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
இந்த விதிமுறைகள் எந்தெந்தக் கல்வி நிறுவனங்களைப் பாதிக்கும், இது நாடு தழுவிய அளவிலா? அல்லது புதிதாக விண்ணப்பிப்போருக்கு மட்டுமா அல்லது நீண்டகாலமாக இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் பொருந்துமா என்பதை அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நிறுவனப் பங்குகளின் இன வாரிசை அடிப்படையாகக் கொள்ளாமல், கற்றல் தரம், ஆசிரியர்களின் தகுதி மற்றும் மாணவர் பாதுகாப்புக்கே கல்வி கட்டுப்பாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதோடு, எந்தவொரு கொள்கையையும் அமுல்படுத்துவதற்கு முன் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் லீ சியான் சுங் தனது ஊடக அறிக்கையில் வலியுறுத்தினார்.



