Latestமலேசியா

டீசல் விலை உயர்வு: வாடகையை உயர்த்த மண்வாரி இயந்திர உரிமையாளர்கள் கோரிக்கை

சுங்கை பட்டாணி, ஜூன்-11 – டீசல் விலை உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக மண்வாரி இயந்திர தொழில் செய்பவர்களும் அதிருப்தித் தெரிவித்துள்ளனர்.

உதவித் தொகை இல்லாத சந்தை விலை என்ற பெயரில் டீசல் விலை திடீரென 1 ரிங்கிட் 20 சென் உயர்வு கண்டிருப்பது கட்டுப்படியாகாது எனக் கூறி கெடா, சுங்கை பட்டாணியைச் சேர்ந்த மண்வாரி இயந்திர உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மதியம் நடைபெற்ற அந்த அமைதி மறியலில் சுமார் 100 பேர் பங்கேற்று தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

எங்களுக்குத் தெரிந்த ஒரே வேலை இதுதான்; இதிலும் இப்படி சிக்கல் வந்தால் எப்படி? ஏற்கனவே வருமானம் போதவில்லை; இதில் டீசல் விலை வேறு உயர்வு கண்டால் எப்படித்தான் சமாளிப்பது?

எனவே, மண்வாரி இயந்திர வாடகையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.

அவ்வகையில், தற்போது ஒரு நாளைக்கு 450 ரிங்கிட்டாக உள்ள வாடகையை செவ்வாய்க் கிழமை முதல் 600 ரிங்கிட்டுக்கு உயர்த்த அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதே மாத வாடகை என்றால் 12,500 ரிங்கிட் வரும்.

இந்த 150 ரிங்கிட் வாடகை உயர்வை ஒரு கோரிக்கையாக தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடம் முன் வைப்பதாகக் கூறிய மண்வாரி இயந்திய உரிமையாளர்கள், தங்களின் நிலைமையைப் புரிந்துக் கொண்டு அக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் திங்கட்கிழமை முதல் டீசல் விலை 3 ரிங்கிட் 35 சென்னுக்கு விற்கப்படுகிறது.

இலக்கு வைக்கப்பட்ட மானிய முறை அமுலுக்கு வந்திருப்பதற்கு ஏற்ப, மே மாத சந்தை சராசரி விலை அடிப்படையில் அப்புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!