![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-27-May-2024-05-26-PM-5244.jpg)
கோலாலம்பூர், மே 27 – போலி சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி, தனிமையில் இருப்பவர்களை, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட தூண்டி, அவர்களிடமிருந்து பணம் வந்தது வந்த கும்பல் ஒன்றின் நடவடிக்கைகளை போலீசார் முறியடித்துள்ளனர்.
இம்மாதம் 16-ஆம் தேதி, தலைநகரிலுள்ள, வீடொன்றில், புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், அக்கும்பலை சேர்ந்த 18 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட, பெண் ஒருவர் உட்பட 12 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் தொடங்கி செயல்பட்டு வருவதாக நம்பப்படும் அக்கும்பலை சேர்ந்தவர்கள், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் வாயிலாக, தனிமையில் வாடுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஆன்லைன் சூதாட்டத்தில் பங்கேற்குமாறு தூண்டியதும் தெரிய வந்துள்ளது.
அவ்வாறு சிக்கும் நபருக்கு இணைப்பு ஒன்று அனுப்பி வைக்கப்படும். அந்த இணைப்பு வாயிலாக சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் முழு பணத்தையும் இழக்க நேரிடும்.
அதற்காக, கைதுச் செய்யப்பட்டவர்களுக்கு நான்கு விழுக்காடு கமிஷனோடு மாதம்தோறும் ஈராயிரத்து 500 ரிங்கிட் வரையில் சம்பளம் வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.