கோலாலம்பூர், நவ 17 – ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மற்றும் சீன மொழியில் சிறப்பு பயிற்சிகளை பெறும் பொருட்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு திட்டத்தின் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக தாம் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக்குடன் பேச்சு நடத்தவிருப்பதாக கல்வித்துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்திருக்கிறார். தமிழ் மற்றும் சீன மொழி பயிற்சிக்கான ஆசிரியர் தேர்வுக்கு சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை விவகாரம் தொடர்பில் இந்திய மற்றும் சீன சமூகம் , சீன கல்வி அமைப்புகளான டோங் சோங் மற்றும் ஜியோ சோங் தெரிவித்திருக்கும் கவலையையும் அச்சத்தையும் தாம் கடுமையாக கருதுவதாக அவர் கூறினார்.
தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழி போதிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் 773பேர் கூடுதலாக இருப்பதாகவும் சீன தொடக்கப் பள்ளிகளில் சீன மொழியை பயிற்றுவிப்பதில் 2,376 பேருக்கும் அதிகமாக இருப்பதாகவும் கல்வி அமைச்சின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழியை விருப்புரிமையாக கற்றுத்தருவதற்கு கூடுதலாக 77 ஆசிரியர்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக 155 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதை 2023ஆம் ஆண்டு புள்ளி விவரம் காட்டுகிறது. அதே வேளையில் சீன தொடக்கப்பள்ளிகளில் சீன மொழியை விருப்புரிமை பாடமாக போதிப்பதற்கு 2,376 ஆசிரியர்கள் கூடுதலாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக சீனப் பள்ளிகளில் 1,300 ஆசிரியர் பற்றாக்குறை நீடிப்பதை லிம் ஹுய் யிங் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார்,