![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-11-at-2.06.17-PM-780x470.jpeg)
கோலாலம்பூர், மார்ச் 11 – நாட்டிலுள்ள தாய்மொழிப் பள்ளிகள் குறித்து தவறான கண்ணோட்டத்தை விதைக்கும், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் Akmal Salehவின் செயலை, உரிமை கட்சியின் தலைவர் டாக்டர் பி. ராமசாமி சாடியிருக்கின்றார்.
தாய்மொழி கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறியாமல் பேசுவதோடு, மக்களின் கவனத்தை Akmal திசைத் திரும்ப முயல்கிறார் என ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
“தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டும் என பகிரங்கமாக உங்களால் போராட்டத்தை தொடங்க முடியுமா? அதனை உங்கள் டிஏபி நண்பர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என நான் அறிய விரும்புகிறேன்” என Akma-லுக்கு ராமசாமி சவால் விடுத்துள்ளார்.
தேசிய முன்னணி ஆட்சிகாலத்தின் போது, மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக தூண்டப்பட்ட இன மற்றும் மத பாகுபாடுகளாலேயே, தாய்மொழி பள்ளிகள் அவசியம் என்பதை தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் ராமசாமி கூறியுள்ளார்.
எனினும், துரதிர்ஷ்டவசமாக, அம்னோவின் தவறான வழிநடத்தலால் உருவாக்கப்பட்ட Akmal போன்ற தலைவர்களுக்கு வரலாற்றைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. அதே சமயம், இந்தியர்களை சிறுமைப்படுத்த வழக்கமாக பயன்படுத்தப்படும், “போதையில் இருக்கிறீர்களா?” என்பது போன்ற கூற்றுகளை மட்டுமே அவரால் வெளியிட மட்டுமே முடியும் என ராமசாமி சினத்தை வெளிப்படுத்தினார்.
அதே சமயம், தாய்மொழி பள்ளிகளை மூடாவிட்டால், எதிர்காலத்தில் மாண்டரின் பள்ளிகளுக்கு செல்லும் மலாய் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுமென, Akmal பயப்படுகிறாரா? எனவும் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, தாய்மொழி பள்ளிகள் நிலைப்பாட்டை வலியுறுத்தும் அதே சமயம், “பங்சா மலேசியா” சமூகம் குறித்து பேசும், பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சருமான பி.இராமசாமி, “போதையில் இருக்கிறாரா?” என, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முஹமட் Akmal Saleh கேள்வி எழுப்பியிருந்தார்.