![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-06-at-8.52.55-AM-780x470.jpeg)
கோலாலம்பூர், டிச 6 – தென்னிந்தியாவில் மிச்சாங் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்றுள்ள மற்றும் அங்கு தங்கியிருக்கும் மலேசியர்கள் மிகவும் கவனமுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
புயல் கடுமையாக பாதித்துள்ள தமிழ் நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திர பிரதேசத்தில் நெல்லூர் மற்றும் பாபட்லா ஆகிய இடங்களை அணுக்கமாக கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயலினால் கடுமையான மழையினால் திங்கட்கிழமை காலையில் வெள்ளம் ஏற்பட்டதோடு பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டன.
இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளும் தடைப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் தங்களது பாதுகாப்பை உணர்ந்து உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றும்படி மலேசிய தூதரகம் கேட்டுக்கொண்டது.