தொடர்ச்சியாக நான்காவது முறையாக EPL கிண்ணத்தை வென்று Manchester City வரலாறு; Arsenal-லின் கனவு மீண்டும் கலைந்தது
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/skynews-manchester-city-trophy_6560068-700x470.jpg)
லண்டன், மே-20 – ஜாம்பவான் அணியான Manchester City, இங்லீஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தைத் தொடர்ச்சியாக நான்காவது முறையாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.
இப்பருவத்திற்கான நேற்றையக் கடைசி ஆட்டத்தில் West Ham-மை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து City கிண்ணத்தைத் தற்காத்துக் கொண்டது.
இதையடுத்து City-யிடம் இருந்து லீக் கிண்ணத்தைத் தட்டிப் பறித்து 20 ஆண்டு கால வறட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் Arsenal அணியின் கனவு மீண்டும் கலைந்தது.
Arsenal, Everton-னை 2-1 என்ற கோல்களில் வீழ்த்தினாலும் அதன் மொத்தப் புள்ளிகள் 89 மட்டுமே; City 91 புள்ளிகளுடன் சாம்பியனானது.
நான்கு முறை தொடர்ச்சியாக EPL கிண்ணத்தை இதுவரை எந்தவோர் அணியும் வென்றதில்லை.
சகாப்தம் Sir Alex Ferguson-னின் Manchester United கூட தொடர்ச்சியாக மூன்று முறை மட்டுமே பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றுள்ள நிலையில், நிர்வாகி Pep Guardiola-வின் Manchester City அச்சாதனையை முறியடித்துள்ளது.
அதோடு Cityயின் நிர்வாகியாக பொறுப்பேற்ற இந்த எட்டாண்டுகளில் Guardiola வென்றுள்ள 6-வது லீக் கிண்ணம் இதுவாகும்.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் FA கிண்ண இறுதியாட்டத்தில் பரம வைரியான Manchester United-டை வீழ்த்தினால், இப்பருவத்தை இரட்டை வெற்றியோடு முடிக்கும் வாய்ப்பு City-க்கு ஏற்படும்.
இவ்வேளையில், EPL பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து Manchester City, Arsenal, Liverpool, Aston Villa ஆகிய அணிகள் அடுத்தப் பருவத்திற்கான Champions League போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளன.
5-6 ஆம் ஆறாம் இடங்களைப் பிடித்து Tottenham, Chelsea ஆகியவை Europa League போட்டிக்கும், 7-ம் இடத்தில் வந்த Newcastle அணி Conference League போட்டிக்கும் தகுதிப் பெறுகின்றன.
Manchester United படுமோசமாக 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
FA கிண்ணத்தை வென்றால் மட்டுமே United-க்கு Europa Leage-கில் விளையாட வாய்ப்புக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.