![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-23-Apr-2024-07-23-PM-5384.jpg)
கூலாய், ஏப்ரல் 24, தொடர்புத் துறை அமைச்சின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி தந்திரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொது மக்கள் நினைவுறுத்தப்படுகின்றனர்.
அமைச்சின் அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்வதை அக்கும்பல் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
பொது மக்களை நம்ப வைப்பதற்காக,
அமைச்சின் இணையத்தளத்தில் இருந்து அமைச்சின் அதிகாரிகளின் முழுப்பெயர்கள், பதவி, கைப்பேசி எண் போன்ற விவரங்களை எடுத்து மோசடி கும்பல் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டிருப்பதாக, தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ ச்சிங் கூறினார்.
இதுவரை அப்படி இரண்டு அதிகாரிகளின் பெயர்கள் மோசடிக்காரர்களால் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழைப்பைப் பெற்ற பொதுமக்களில் சிலர் அமைச்சை நேரடியாகத் தொடர்புக் கொண்டு விவரங்களைச் சரிபார்த்த போது, அது மோசடிக்காரர்களின் வேலை என அம்பலமானதாக தியோ நீ ச்சிங் சொன்னார்.
இந்த ஆள்மாறாட்ட கும்பலின் நடவடிக்கை அமைச்சுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்றார் அவர்.
இவ்வேளையில், போலி முதலீடுகள் மற்றும் சூதாட்டம் தொடர்பில், இவ்வாண்டு மார்ச் வரை 35,500 சமூக ஊடகத் தள இடுகைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் துணையமைச்சர் கூறினார்.
அவற்றில், 28,513 இடுகைகள் சூதாட்ட நடவடிக்கைகளையும், எஞ்சியவை முதலீடு மற்றும் ஆள்மாறாட்டத்தையும் உட்படுத்தியவையாகும் என்றார் அவர்.