![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-06-Jun-2024-04-20-PM-614.jpg)
கோலாலம்பூர், ஜூன் 6 – குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான, அதன் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துணையமைச்சர் டத்தோ ரமணன் வலியுறுத்தினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் பல்வேறு துறைகளில் உள்ள வணிகங்களின் பெரும்பகுதியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, உள்ளூர் நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு வழங்கப்படும் விருதுகள், தொழில்முனைவர்களின் செயல்திறனை மேம்படுத்துவற்கு முக்கியமாக விளங்கும் என நேற்று மலேசிய தொழில்துறை ஆளுமைகள் மற்றும் தொழில்முனைவர்களுக்கான 2024ஆம் ஆண்டு விருது விழாவில் அவர் தெரிவித்தார்.
அமானா இக்தியார் மலேசியா மற்றும் தெக்குன் நேசனல் போன்ற தொழில் முனைவர் துறையில் நுழைபவர்களுக்கு விரிவான சேவைகள் தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏஜென்சிகளும் வழங்குகின்றன என்றும் டத்தோ ரமணன் எடுத்துரைத்தார்.
மலேசிய தொழில்துறை ஆளுமைகள் மற்றும் தொழில்முனைவர்களுக்கான 2024ஆம் ஆண்டு விருது விழா, நாட்டில் உள்ள தொழில்முனைவர்கள், இளம் தொழில்முனைவர்கள் மற்றும் அனைத்து இனங்களை உள்ளடக்கிய தொழில்முனைவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
NiagaTimes-யின் எட்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, தொழில்முனைவர்கள் உள்ளூர் நிறுவனங்களிடையே சிறந்து விளங்குவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.