![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-11-Mar-2024-08-57-PM-7561.jpg)
கோலாலம்பூர், மார்ச் 11 – நாட்டில் சட்டவிரோதமாக 1.2 மில்லியன் சீனப் பிரஜைகள் இருப்பதாக எதிர்க்கட்சி எம்பி ஒருவர் கூறியதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் மறுத்துள்ளார். ‘Kepala Batas’ பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் சிதி மஸ்துரா முகமட் தெரிவித்திருக்கும் இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்ற மற்றும் ஆதரமற்றது என சைபுதீன் கூறினார்.
2018 ஆம் ஆண்டு முதல் நாட்டிற்குள் நுழைந்த 1.2 மில்லியன் சீன பிரஜைகள் இன்னும் வெளியேறவில்லை என்று சிதி மஸ்துரா கூறியிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். இன்று நாடாளுமன்றத்தில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான தமது அமைச்சின் கேள்விக்கு பதில் அளித்த சைபுதீன், இந்த விவகாரத்தில் தமது அமைச்சு எப்போதும் வெளிப்படையாக இருப்பதாக கூறினார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குமிடையே நாட்டிற்குள் 46 மில்லியன் வெளிநாட்டினர் நுழைந்திருப்பதாக சைபுதீன் விவரித்தார். அவர்களில் 3.9 மில்லியன் பேர் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டனர். 6 மில்லியன் பேர் இன்னமும் இங்கிருப்பதாக அவர் தெரிவித்தார். மூன்று முதல் 5 ஆண்டுகள் வரையிலான தவணைக்கான நீண்ட கால செல்லத்தக்க பாஸ்களை வைத்திருப்பதால் அவர்கள் இன்னும் இங்கிருக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டினர்.