![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-08-Feb-2024-09-02-AM-2761.jpg)
கோலாலம்பூர், பிப் 8 – இவ்வாண்டு இதுவரை டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 65 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில் இவ்வாண்டின் முதல் ஐந்து வாரங்களில் 18,247 பேர் டிங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் டிங்கி காய்ச்சலினால் 11,127 பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் முஹம்மட் ரட்சி அபு ஹாசன் தெரிவித்திருக்கிறார். மேலும் இவ்வாண்டு டிங்கி காய்ச்சலினால் இதுவரை 9 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2024ஆம் ஆண்டின் ஐந்தாவது வாரத்தில், டிங்கி காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 3,969 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் டிங்கி காய்சலினால் 3,781 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதே சமயம், வரவிருக்கும் பண்டிகைக் காலங்கள் மற்றும் பள்ளி விடுமுறையின்போது ஏடிஸ் கொசுக் கடியால் டிங்கி எளிதாக பரவும் வாய்ப்பு இருப்பதாக டாக்டர் ரட்சி தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியேறும் முன், வீட்டில் தண்ணீர் தேங்கக்கூடிய கொள்கலன்கள் இல்லை என்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.