
தெஹ்ரான், மே-28-அமெரிக்காவுடனான ஒப்பந்த நிபந்தனைகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டால், அனைத்துலக வர்த்தக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த Hormuz நீரிணை ஒரு மாதத்திற்குள் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என, ஈரானிய அரசு அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இருதரப்பு உடன்படிக்கைக்கான நகலறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, நிபந்தனைகள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டால் அடுத்த 30 நாட்களுக்குள் Hormuz நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்து வழக்கம் போல் மீட்டெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
வட்டாரத்தில் நிலவும் பதற்றங்களைத் தணிக்கவும் கடல்சார் பாதுகாப்பை உறுதிச் செய்யும் நோக்கிலும் இந்த காலக்கெடு முன்வைக்கப்பட்டுள்ளதாம்.
என்றாலும், ஈரான் ஊடகங்களில் வெளியாகி வரும் இந்த ஒப்பந்த வரைவு மற்றும் நிபந்தனைகள் குறித்த செய்திகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முற்றிலுமாக மறுத்துள்ளது.
இது போன்ற ஒரு நகல் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்றும், வெளியாகி வரும் தகவல்கள் “முற்றிலும் ஜோடிக்கப்பட்டவை” என்றும் அமெரிக்கா கூறிக் கொண்டுள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் Hormuz நீரிணையை மீண்டும் எப்போது முழு அளவில் திறக்கப்படுமென உலக நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.



