![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-15-Mar-2024-07-40-PM-3835.jpg)
நைஜீரியா, மார்ச்-15 – நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் 287 பேரைக் கடத்தி வைத்திருக்கும் ஆயுதமேந்திய கும்பல், அவர்களை விடுவிக்க, பிணைப் பணமாக 1 பில்லியன் naira அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு 29 லட்சத்தைக் கேட்கிறது.
மாணவர்கள் கடத்தப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களுக்குள் கேட்ட பணத்தைத் தராவிட்டால், அவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என அக்கும்பல் மிரட்டியியுள்ளது.
கடுனா மாநிலத்தில் உள்ள கிராமப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களைத் தான் அக்கும்பல் மார்ச் ஏழாம் தேதி கடத்தியது.
மோட்டார் சைக்கிளில் வந்த அக்கும்பல், அங்குள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கடத்தியது.
அவர்களில் சிலர் காப்பாற்றப் பட்ட வேளை, இன்னமும் 287 மாணவர்கள் அக்கும்பலின் பிடியில் சிக்கியுள்ளனர்.
அவர்களில் குறைந்தது 100 பேர் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் என தெரிகிறது.
தங்கள் இயக்க உறுப்பினர்களைக் கொலைச் செய்ததற்காக, நைஜீரிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படையைப் பழித் தீர்க்கவே மாணவர்களைக் கடத்தியிருப்பதாக அக்கும்பல் கூறிக் கொண்டது.
என்றாலும், அக்கும்பலின் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டாம் என்றும், பிணைப் பணம் தரும் பேச்சுக்கே இடமில்லை என்றும் நைஜீரிய அதிபர் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் பாதுகாப்புக் குறித்து பெரும் கவலையில் இருக்கின்றனர்.