![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/443697943_122147884322166941_8198922915538583312_n.jpeg)
கோலாலம்பூர், மே-18 – பவள விழா ஆண்டில் காலடி வைக்கும் Bank Rakyat, பெருமை மிக்க தனது 70 ஆண்டு கால சேவையை அதே வீரியத்தோடு மக்களுக்குத் தொடர வேண்டும்.
தொழில் முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த 70 ஆண்டுகளில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் Bank Rakyat உச்சத்தைத் தொட்டு நிற்கிறது.
அப்படி ஆலமரம் போல் அது வளர்ந்து நிற்பதற்கு அரும்பணியாற்றியவர்கள் கண்டு தாம் பெருமிதம் கொள்வதாக துணையமைச்சர் சொன்னார்.
நாட்டில் தொழில் முனைவோருக்கும் கூட்டுறவு துறையின் வளர்ச்சிக்கும் உதவ Bank Rakyat முன்னெடுத்து வரும் அனைத்துத் திட்டங்களுக்கும் தமதமைச்சு உறுதுணையாக இருந்து வரும் என்றும் டத்தோ ரமணன் உறுதியளித்தார்.
குறிப்பாக தொழில் முனைவோர்களுக்காக Bank Rakyat அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்கள் ஆக்ககரமான பலனைத் தந்திருப்பதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
இது போன்ற முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என வலியுறுத்திய டத்தோ ரமணன், அவற்றைச் செயல்படுத்துவதில் சந்திக்கப்போகும் சவால்களை எதிர்கொள்ள கால மாற்றத்திற்கு ஏற்ப தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Bank Rakyat-டின் ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோ ரமணன் அவ்வாறுக் கூறினார்.
1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Bank Rakyat வரும் செப்டம்பர் 28-ஆம் தேதியோடு 70 ஆண்டுகளை நிறைவுச் செய்து பவள விழாவைக் கொண்டாடுகிறது.