பாலியல் குற்றங்கள் ; கல்வி அமைச்சு ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-25-at-1.17.00-PM-1-780x470.jpeg)
புத்ராஜெயா, மார்ச் 25 – கல்வி அமைச்சின் கீழ் உள்ள, கல்விக்கூடங்களில் நிகழும் பாலியல் குற்றங்கள் தொடர்பில், ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது.
16 வயது ஆண் மாணவரிடம், ஆசிரியர் ஒருவர் பாலியல் “சேட்டை” புரிந்ததாக முன் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படுமென, கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை, கல்வி அமைச்சு கடுமையாக கருதுகிறது.
அச்சம்பவத்தை கல்வி அமைச்சு தீவிரமாக கண்காணித்து வருவதோடு, ஏற்கனவே அமலில் இருக்கும், பாலியல் வன்செயல் நிர்வாக வழிகாட்டிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, 37 வயது ஆசிரியர் ஒருவர், பள்ளி நூலகத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த 16 வயது ஆண் மாணவரிடம், ஆபாச சேட்டை புரிந்தது தொடர்பில், கடந்தாண்டு டிசம்பர் 12-ஆம் தேதி புகார் ஒன்று செய்யப்பட்டதாக, செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் கூறியிருந்தார்.
சிறார் பாலியல் குற்றச்செயல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படும் வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையுடன், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.