![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-08-Dec-2023-09-19-AM-5887.jpg)
கோலாலம்பூர், டிச 8 – பினாங்கில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் இறை வாழ்த்துப் பாடல் மற்றும் தமிழ் வாழ்த்துப் பாடல் பாடுவதற்கு தடைவிதித்த கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.
நவம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற செந்தமிழ் விழாவில் இறைவாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் தடைக்கு பொறுப்பாக இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெகின் உதவியாளர் தியாகராஜ் சங்கரநாராயணன் தமது முகநூலில் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் எந்தவொரு நபரையும் மடானி அரசாங்கம் பாதுகாக்காது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக கல்வி அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளார் என தியாகராஜ் தெரிவித்திருக்கிறார்.
அதோடு இந்த விவகாரத்தில் தொடர்புடைய இதர அதிகாரிகள் மீது அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லையென்றும் அவர் கூறினார்.