![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-22-Nov-2023-01-42-PM-3797.jpg)
கோலாலம்பூர், நவ 22 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் நிதியமைச்சர் பதவியை வகிக்க சிறந்தவர் என பொருளாதார அமைச்சரான ரபிசி ரம்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிதியமைச்சகத்தை வழிநடத்தும் தனிநபருக்கு நிர்வாகம் மற்றும் கொள்முதல் விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதே இதற்கு காரணம் என அவர் கூறினார். நிதியமைச்சராக வருவதற்கான சிறந்த நபர் பிரதமர்தான். கொள்முதல் தொடர்பான முறையான நிர்வாகத்தை உறுதிசெய்வதற்கும், முன்பு நடந்ததைப் போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கும் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கும் என கேள்வி நேரத்தின்போது பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிஷி தெரிவித்தார். பாகோ பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினரான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதில் அளித்தபோது ரபிஷி இத்தகவலை வெளியிட்டார்.
நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து சில ஆய்வாளர்களும் மக்களும் கவலையுடன் இருப்பதால், பிரதமர் முழுநேர நிதி அமைச்சரை நியமிப்பது பொருத்தமான தருணமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்று முஹிடின் பொருளாதார அமைச்சரிடம் கேட்டார். ரபிஷி தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபத்தை தெரிவித்தனர்.