![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-14-Apr-2024-10-25-AM-1109.jpg)
கோலாலம்பூர், ஏப்ரல்-14 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
அவரின் உடல் தகுதி குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என பிரதமரின் அரசியல் செயலாளர் கமில் முனிம் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு நெருக்கமானவர் என்ற முறையில், நம்மில் பலரை விட அவர் சிறந்த உடல் தகுதியைக் கொண்டிருப்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும் என கமில் முனிம் சொன்னார்.
76 வயதில், தினசரி அரசு அலுவல் காரணமாக அவ்வப்போது சற்று சோர்வடைவதோ, காய்ச்சல் வருவதோ அல்லது ஒவ்வாமை ஏற்படுவதோ சகஜம் தான்.
இருப்பினும், அவரது சுறுசுறுப்புக்கும் உற்சாகத்திற்கும் குறைவில்லை என கமில் முனிம் சொன்னார்.
விமர்சனங்கள் வந்தாலும், இந்த வயதிலும் நாட்டை மறுசீரமைக்கும் கடப்பாட்டில் இருந்து எள்ளளவும் பின்வாங்காமல் டத்தோ ஸ்ரீ அன்வார் உழைத்து வருவதாக கமில் முனிம் அறிக்கையொன்றில் பெருமிதத்துடன் கூறினார்.
சிலருக்கு பிரதமர் குறித்து அவதூறு பரப்புவதே வேலையாகி விட்டதாகவும் Kamil சாடினார்.
பிரதமர் மீது தீராத வெறுப்புக் கொண்டவர்கள் அதுவும் இந்த புனித ஷவ்வால் மாதத்தில் அவதூறுகளை கண்டமேனிக்கு அள்ளித் தெளிக்கின்றனார்.
பேச்சுரிமை என்ற பெயரில் அவதூறு செய்வதை ஏற்க முடியாது; எனவே அத்தகையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசை வலியுறுத்துவதாகவும் கமில் முனிம் கூறினார்.
அவர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், இணையப் பதிவேட்டாளர்கள் சிலர் அண்மையக் காலமாகவே டத்தோ ஸ்ரீ அன்வாரின் உடல் நலம் குறித்து கேள்வி எழுப்பி வருவதை மறுக்கும் விதமாகத் தான் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பதை யூகிக்க முடிகிறது.