![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-04-Dec-2023-11-53-AM-1239.jpg)
கோலாலம்பூர், டிச 4 – கேமரன் மலையில் கடந்த ஆண்டு அறுவர் உயிர் தப்பிய ஹெலிகாப்டர் விபத்திற்கு மோசமான வானிலையின்போது ஹலிகாப்டர் ஓட்டுனர் எடுத்த தவறான முடிவே காரணம் என அந்த விபத்து குறித்த விசாரணை குழு வெளியிட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டது. அந்த ஹெலிகாப்டரின் செயல்பாடு நல்ல நிலையில் இருந்ததால் விபத்திற்கு ஹெலிகாப்டர் பழுது காரணம் இல்லை. அதே வேளையில் மலைப்பகுதிகளில் மற்றும் மோசமான வானிலையின்போது ஹெலிகாப்டர் ஓட்டுனருக்கான தொடர்ச்சியான பயிற்சி திட்டம் வழங்கப்பட வேண்டுமென ஹெலிகாப்டர் நிறுவனங்களை நடத்துவோருக்கு உத்தரவிடும்படி விமான இயக்குனருக்கு விசாரணைக் குழு பணித்துள்ளது.
தேவையற்ற அபாயங்களை எடுக்காமல் இருக்க ஹெலிகாப்டர் ஓட்டுனரின் இடர் மதிப்பீட்டு திறன்கள் மற்றும் முடிவு எடுக்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான Airbus AS 355 F2 ஹெலிகாப்டர், பேராக்கின்தஞ்சோங் ரம்புத்தானிலிருந்து மருத்துவ பணி பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது கேமரன் மலையில் பிரிஞ்சாங்கிற்கு அருகே விபத்துக்குள்ளானது. அப்போது அந்த ஹெலிகாப்டரில் ஒரு மருத்துவர், இரண்டு தாதியர்கள் மற்றும் இரண்டு மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.