
கோலா சிலாங்கூர், மே-19- கோலா சிலாங்கூரில் புக்கிட் ரோத்தான் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம் ஆலயத்தின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்தர்களின் திரளான ஆதரவோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
1930ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயம், பல ஆண்டுகளாக பக்தர்களின் நம்பிக்கையின் மையமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புக்கிட் ரோத்தான் வட்டார பகுதியிலுள்ள தோட்டங்களை விட்டு வெளியேறிய பலரும் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா நிகழ்வில் கலந்துகொண்டு தங்களது பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் முக்கிய நிகழ்வாகவும் இந்த திருவிழா அமைந்தது.
திருவிழாவின் உச்சக் கட்டமாக தீமிதி அக்னி நிகழ்வும் நடைபெற்றது. மதிய பூஜைக்குப் பின் பக்தர்களுக்காக வாழை இலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.



