
பத்து பஹாட், ஜூலை-5-ஜோகூர் மாநிலத்தின் புதிய வீடமைப்புத் திட்டங்களில், முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக நிலத்தை ஒதுக்க வேண்டும் என பத்து பஹாட் சீனக் கோவில் விவகாரக் குழு, மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பத்து பஹாட் சீனக் கோவில் சங்கத்தின் 37-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய அதன் தலைவர் Soh Thiam Hock, 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பெரிய அளவிலான வீடமைப்புத் திட்டங்களில், முஸ்லீம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எனத் தனி நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் மூலம் வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானப் பணிகளைச் சட்டப்பூர்வமாகவும், முறையாகவும் திட்டமிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுற்றுலாத் திறனுள்ள கோவில்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமுதாயத்தின் மத மற்றும் கலாச்சாரத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய, இந்தத் திட்டம் மிகவும் அவசியமானது என்று அவர் சொன்னார்.



