
போர்டிக்சன், செப்டம்பர்-16,புதிய MyKad அடையாள அட்டையைப் பெற நீங்கள் திட்டமிட்டிருந்தால், உள்துறை அமைச்சு உங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளது.ஆம், அவசரப்பட வேண்டாம்!”
சுமார் 50 புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த மேம்படுத்தப்பட்ட MyKad அட்டைக்கான விண்ணப்பங்கள் நாளை, செப்டம்பர் 17 முதல் தொடங்குகின்றன.
என்றாலும் பொது மக்கள் தேசியப் பதிவிலாகாவான JPN அலுவலகங்களுக்கு உடனடியாக விரைந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
_”உங்களிடம் உள்ள தற்போதைய MyKad அட்டை தொடர்ந்து செல்லுபடியாகும். அனைத்து அரசாங்கச் சேவைகள் மற்றும் அன்றாடப் பரிவர்த்தனைகளுக்கும் அதை வழக்கம்போல் பயன்படுத்தலாம்”_ என்றார் அவர்.
MyKad அட்டையை உடனடியாக மாற்றாவிட்டாலும், உங்களின் மானியங்கள் அல்லது பிற பதிவுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அனைத்துத் தரவுகளும் மையக் கணினியில் பாதுகாப்பாக உள்ளன என அமைச்சர் சொன்னார்.
நாடு முழுவதும் 24 மில்லியன் MyKad பயனர்கள் உள்ளதால், நெரிசலைத் தவிர்க்க முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 JPN கிளைகளில் மட்டுமே இந்தச் சேவை தொடங்கப்படுகிறது.



