![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-29-May-2024-08-20-PM-6186.jpg)
ஈப்போ, மே 29 – புந்தோங் வட்டாரத்தில் இணைய மையம் ஒன்றில் நிகழ்ந்த தகராறு மீதான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலான விவகாரம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்களில் இருவரை போலீசார் கைது செய்தனர். அந்த தகராறு நடந்த 24 மணி நேரத்திற்குள் புந்தோங் வட்டாரத்தில் 19 மற்றும் 20 வயதுடைய இரு சந்தேக பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Abang Zainal Abidin தெரிவித்தார். கணினி விளையாட்டு கடையில் ஏற்பட்ட அந்த மோதல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியை நேற்று நாங்கள் உறுதிப்படுத்தினோம் என அவர் கூறினார்.
திங்கட்கிழமை இரவு மணி 10.15 அளவில் புந்தோங்கில் உள்ள இணைய மையத்தில் ஏற்பட்ட அந்த சம்பவம் தொடர்பில் 24 வயது ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். . கணினி விளையாட்டில் தாங்கள் ஈடுபட்டிருந்தபோது கத்தி வைத்திருந்த ஐந்து ஆடவர்கள் தாக்கியதால் தனது நண்பர்களில் சிலர் காயம் அடைந்ததாக அந்த ஆடவர் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். புகார் செய்த ஆடவரும் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்கு உள்ளானதால் கை மற்றும் வயிற்றில் காயம் அடைந்ததோடு ஏழு தையல்கள் போடப்பட்டதாக தெரிவித்திருக்கிறார் என Abang Zainal கூறினார்.