Latestமலேசியா

ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் எம்.ஏ.சி.சியின் தலைவருக்கு பேட்டி வழங்கினார்

கோலாலம்பூர், ஜன 31 – ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் நேற்று மாலை கோலாலம்பூரில் எம்.ஏ.சி.சி (MACC) எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர்ஆசம் பாக்கிக்கு பேட்டி வழங்கினார். அவர்களுக்கிடையிலான அந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றதாக பெர்னாமா தகவல் வெளியிட்டது. தமது தந்தையார் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இன்று காலை 17ஆவது பேரரசராக பிரகடனப்படுத்தவிருக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக துங்கு இஸ்மாயில் கோலாலம்பூர் வந்துள்ளார். கடந்த காலங்களில் ஊழலுக்கு எதிராக துங்கு இஸ்மாயில் குரல் எழுப்பியுள்ளார். லஞ்ச ஊழல் பாரம்பரியமாகிவிட்ட ஒரு நாட்டில் வாழ்ந்து வருவதாக 2017ஆம் ஆண்டில் அவர் வருணித்திருந்தார்,

“ஊடகங்கள் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் நாடு மற்றும் அப்பாவிகளை கதைகளை விற்க பலியாக்கும் நாடு” என்று அப்போது அவர் தமது முகநூலில் பதிவிட்டிருந்தார். விசாரணை அதிகாரிகளை ஈடுபடுத்தாமல், மலேசியக் கால்பந்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழலைத் தாம் தூய்மைப்படுத்தப் போவதாகஜோகூர் டாருல் தாசிம் காற்பந்து குழுவின் உரிமையாளரான துங்கு இஸ்மாயில் ஒரு ஆண்டுக்கு முன் உறுதியளித்தார். நாட்டின் பேரரசராக தாம் பதவியேற்றவுடன் தமது அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை துடைத்தொழிக்கப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்திருந்தார். அதோடு எம்.ஏ.சி.சியும் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசும் தமது நேரடி பார்வையில் இருக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!