கோலாலம்பூர், டிச 19 – செந்தூல் ஸ்ரீ நாக அம்மன் கோயில் உடைப்பு தொடர்பாக தீர்வுக் காண டிசம்பர் 26ஆம் தேதி YTL நிறுவனத்தின் உயர் அதிகாரியிடம் பேச்சு நடத்தப்படும் என ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இந்த பேச்சுக்களில் கலந்துகொள்ளும்படி பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்த அவர் கோயில் நிர்வாகக் குழுவினர், ம.இ.கா மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ ஏ.கே.ராமலிங்கம் ஆகியோரோடு தாமும் கலந்து கொள்ளவிருப்பதாக கூறினார்.
கோயில் நிர்வாகத்தை பொறுத்தவரை மாற்று இடத்தில் கோயிலை கொண்டுச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான பொருத்தமான இடம் மற்றும் கோயிலை நிர்மாணிப்பதற்கு போதுமான நிதியும் தேவைப்படுகிறது. இது தொடர்பாக YTL நிறுவனத்துடன் சுமுகமான முறையில் பேச்சு நடத்தப்படும் என சரவணன் கூறினார்.
இதனிடையே இந்த கோயில் விவகாரத்திற்கு சரவணன் தலையிட்டதை தொடர்ந்து டத்தோ ராமலிங்கம் மற்றும் ஆலய நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதமும் ஒரு முடிவுக்கு வந்தது.
அதோடு இந்த கோயிலில் தினசரி நித்ய பூஜை நடைபெறுவதற்கு கோயிலை திறந்த விடுவதற்கும் YTL நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சரவணன் தெரிவித்தார்.
இது கோயில் பிரச்சனையாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.