
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான FOMEMA மருத்துவப் பரிசோதனைக்காக போலி கடப்பிதழ்களை தயாரித்த கும்பலை மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) முறியடித்துள்ளது.
இந்த நடவடிக்கையில், கும்பலின் தலைமை மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்படும் இந்தோனேசிய ஆடவரும், மேலும் இரு இந்தோனேசியர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு மாத புலனாய்வுக்குப் பிறகு தாமான் ஸ்ரீ கூச்சிங் மற்றும் தாமான் புக்கிட் செராஸ் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, 119 போலி கடப்பிதழ்கள், அச்சுப்பொறி, கைப்பேசிகள் மற்றும் 1,500 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
FOMEMA மருத்துவப் பரிசோதனையில் தோல்வியடைந்த அல்லது தகுதியற்ற வெளிநாட்டவர்களுக்கு 80 முதல் 130 ரிங்கிட் வரை கட்டணம் பெற்று மாற்றியமைக்கப்பட்ட கடப்பிதழ்களை இந்தக் கும்பல் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டில் இதே முறையில் செயல்பட்ட கும்பலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது நடவடிக்கை இதுவாகும்.



