![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-08-Dec-2023-09-53-AM-9370.jpg)
கோலாலம்பூர், டிச 8 – மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் நடத்தப்படும் என தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் முதல் ஓர் ஆண்டு காலத்தின்போது அமல்படுத்தப்பட்ட கொள்கைகள், முயற்சிகள் , திட்டங்கள் மற்றும் வெற்றிகளை மக்கள் அறிந்துகொள்வதற்கும், அதனை பின்பற்றுவதற்கும் சிறந்த தளமாக இந்த விழா அமையும் என அவர் கூறினார்.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே உள்ளவர்கள் இதில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம்.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நிகழ்ச்சிகளை சிறிய அளவில் ஏற்பாடு செய்யும்படி தகவல் துறைக்கு தாம் பணித்திருப்பதாக பாஹ்மி பாட்சில் தெரிவித்தார். அனைத்து அமைச்சர்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க சார்பு நிறுவனங்களின் பங்கேற்பும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் என அவர் கூறினார்.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.