
புத்ராஜெயா, ஜூலை-28-தேசியக் கல்வி முறையில் மலாய் மொழியை அறிவுசார் மொழியாக வலுப்படுத்துவது முன்னுரிமையாகத் தொடரும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
அதே வேளையில் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் உலகளாவிய மதிப்புமிக்க அந்நிய மொழிகளையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மலாய் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயமானது. அதே சமயம் அனைத்துலக அரங்கில் மலேசியா ஒரு போட்டித்தன்மை மிக்க நாடாக விளங்க, ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம் என பிரதமர் சொன்னார்.
வெளிநாட்டு மொழிகளில் புலமையை விரிவுபடுத்துவதை, மலாய் மொழியைப் பாதுகாக்கும் முயற்சிக்கு முரணான ஒன்றாக அரசாங்கம் கருதவில்லை.
மாறாக, தற்போதைய தேவைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிகளுக்கு ஏற்ப, மாண்டரின், தமிழ், அரபு, பிரெஞ்சு மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், ஆசிரியர்களின் நலனை அரசாங்கம் தேசிய முன்னுரிமையாகத் தொடர்ந்து கருதும் என அவர் வலியுறுத்தினார். ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு அல்லது தொழில் முன்னேற்றம் தொடர்பான வாய்ப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
புத்ராஜெயாவில் கல்வி அமைச்சின் பணியாளர்கள் சந்திப்பில் உரையாறிய போது பிரதமர் அவ்வாறு சொன்னார்.
அந்நிகழ்வில் கல்வி அமைச்சர் Fadhlina Sidek, அரசாங்கத் தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar ஆகியோரும் கலந்து கொண்டனர்.



