![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-26-Nov-2023-10-34-AM-1148.jpg)
கோலாலம்பூர், நவ 26 – மலேசியாவிலிருந்து கச்சா செம்பனை எண்ணெயை கூடுதலாக இறக்குமதி செய்வதற்கு விரும்பும் இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான செயல்முறை திட்டத்தை தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சு ஆராய்ந்து வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசோப் தெரிவித்திருக்கிறார்.
மலேசியாவின் கச்சா செம்பனை எண்ணெயை பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடாக தற்போது இந்தியா திகழ்கிறது. ஒர் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் மெட்ரிக் கச்சா செம்பனை எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதாக ஃபாடிலா யூசோப் கூறினார்.
எனினும், இந்த இறக்குமதி அளவு போதுமானதாக இல்லையென்பதால் கச்சா செம்பனை இறக்குமதியை 6 மில்லியன் டன்னான அதிகரிக்கும்படி இந்தியா கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் அனைத்து கச்சா செம்பனையையும் நாம் ஒரே நாட்டிற்கு விற்பனை செய்யமுடியாது.
செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கான தேவையை நாம் நிறைவு செய்ய வேண்டியிருப்பதால் நமக்கும் சுத்திகரிக்கப்டாத செம்பனை எண்ணெய் தேவைப்படுவதாக ஃபாடிலா யூசோப் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு சீனா மலேசியாவிடமிருந்து 3.4 மில்லியன் டன் செம்பனை எண்ணெய் இறக்குமதியை அதிகரித்திருப்பதால் அந்நாட்டிற்கும் மலேசியா முன்னுரிமை வழங்க வேண்டியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.